Wednesday, October 20, 2010

மனசே...

புஷ்பாக்கு எரிச்சலாக இருந்தது. என்ன நாடு இது என்று முணு முணுத்தார். என் மூத்த மகன் அப்பவே சொன்னான்.
" அம்மா, உங்களுக்கு வெளிநாடு சரி வராது. போய் கஷ்டப்படப் போறீங்க", என்றானே.
அப்பவே அவன் பேச்சைக் கேட்டிருந்தால் இப்படி அவஸ்தைப்பட்டிருக்க மாட்டேனே.
புஷ்பா வெளிநாட்டில் மகனைப் பார்க்க வந்தார். கடைக்குட்டி மகன் ஆசையாக கூப்பிட்ட போது மறுக்க முடியவில்லை.
வந்து இறங்கிய போதே குளிர் வாட்டி எடுத்தது. வீட்டில் ஹீட்டர் இருக்கு என்றான் மகன்.
ஹீட்டர் சூட்டில் தலைவலி வந்து அவதிப்பட்டார். குளிரில் வெளியே போனால் கை, கால்கள் எல்லாமே மரத்துப் போனது.
அதோடு ஜாக்கட், தொப்பி, கையுறை, காலுறை, சப்பாத்து என்று வரிசையாக மாட்டி, பிறகு வீடு வந்ததும் அதனைக் கழட்டி, அதற்குரிய இடங்களில் வைத்து, நினைக்கவே மூச்சு வாங்கியது.
மகனும், மருமகளும் வேலைக்கு கிளம்பிவிட இவருக்கு ஜன்னல் மட்டுமே தோழி.
அதனுடன் பேசியவாறே வெளியே வேடிக்கை பார்ப்பார். பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் வாழ்க்கை முறை இவருக்கு அத்துப்படியானது.
9 மணிக்கு இஸ் எனப்படும் இஸபெல்லா வாக்கிங் போவதும், தூங்கு மூச்சி ஜான் வேலைக்கு 11 மணிக்கு போவதும், ரீட்டா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என்று எல்லாவற்றையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.
இஸ்ஸுடன் பேச விருப்பம் இருந்தாலும் மொழிப் பிரச்சினை. தொடக்கத்தில் சைகையில் பேசிக் கொண்டார்கள். இவரின் பெயரை புஷ் என்று அவர் சுருக்கி கொள்ள, இஸபெல்லா இஸ் ஆகிப்போனார்.


இந்த நாட்டில் எல்லாமே பணம் தான் என்று எண்ணிக் கொள்வார்.
ஊரில் இருந்த வரை கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை கொசுறு வாங்கியே ஒரு வாரம் வரை ஓட்டுவார். இங்கு என்னப்பா எல்லாத்துக்குமே காசா? என்று வியந்து போனார்.
மகன் சிரித்துக் கொள்வான்.
" அம்மா, இலவசமாக குடுப்பதற்கு இது என்ன கோபால் கடையா?", என்று கடுப்படித்தான்.
போன வாரத்திலிருந்து கை, காலெல்லாம் ஒரே வலி. டாக்டரிடம் போக வேண்டும் என்று நச்சரித்தார்.
மகன் கூட்டிச் சென்றான். வெள்ளைக்கார டாக்டர் ஸ்நேகமாக புன்னகைத்தார். இவர் தன் நோய் பற்றி மகனுக்கு சொல்ல, மகன் மொழிபெயர்த்து டாக்டரிடம் சொல்ல, மருத்துவர் ஏதேதோ மருந்துகள் எழுதிக் கொடுத்தார். தூக்க மாத்திரை வேணும் என்று கேட்ட தாயை மகன் இழுத்து வராத குறையாக வெளியே கூட்டி வந்தான்.
புஷ்பாக்கு சந்தேகம்.
" அதெப்படிப்பா நான் என் நோயைப்பற்றி 4 நிமிடங்கள் சொன்னேன். நீ 1 நிமிடத்தில் மருத்துவருக்கு சொல்லி விட்டாயே?", என்று சீறினார்.
" அம்மா, ஆங்கிலத்தில் நீட்டி முழக்காமல் சொன்னேன். அவ்வளவு தான்", என்று நிறுத்தினான்.
தூக்கம் வராமல் அவதிப்பட்டார். ஊரில் மற்றப் பிள்ளைகளின் நினைவு ஏங்க வைத்தது. தூக்க மாத்திரை கேட்டும் வாங்கி குடுக்காத மகன் மீது எரிச்சல் உண்டானது.
மாலை வேலையால் வந்த போது மகனின் கையில் மருந்துப் புட்டிகள். தூக்க மாத்திரையும் இருக்கு என்று சொல்லி ஏதோ ஒரு பாட்டிலை நீட்டினான். புஷ்பாக்கு சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு தூக்க மாத்திரையிம் உதவியுடன் நன்கு தூங்கியதாக காலையில் மருமகளிடம் மகிழ்ச்சியை தெரிவித்தார்.

தூக்கம் வந்தாலும் கை, காலில் வலி மட்டும் குறையவேயில்லை.
தமிழ் டாக்டரிம் தான் போவேன் என்று அடம் பிடித்தார்.
இந்த அத்துவானக் காட்டில் நான் எங்கே போவேன் தமிழ் டாக்டருக்கு என்று மகன் குறைபட்டுக் கொண்டான்.
புஷ்பாவின் தொல்லை தாங்காமல் எங்கோ ஒரு தமிழ் டாக்டர் இருப்பதாக கேள்விப்பட்டு மகன் கூட்டிச் சென்றான்.
போகும் போது இவர் பாவிக்கும் மருந்துகளையும் மறக்காமல் எடுத்துச் சென்றார். இங்கு ஒரு டாக்டரிடமிருந்து வேறு டாக்டரிடம் செல்லும் போது கட்டாயம் இப்படி மருந்துகளைக் கொண்டு போய் காட்ட வேண்டும். அவர்கள் அதற்கேற்றாப் போல வைத்தியம், மருந்துகள் குடுப்பார்கள்.

புஷ்பா மருத்துவரிடம் மருந்துகளைக் காட்டினார். அவர் ஒவ்வொரு மருந்தாக பார்த்தார். தூக்க மாத்திரையின் உதவியுடன் தான் தூங்குவேன் என்று சொன்ன புஷ்பாவை கேள்விக் குறியுடன் நோக்கினார்.
அதை நீங்கள் கொண்டு வரவில்லையா? என்று கேட்ட டாக்டரிடம் இதோ இங்கே இருக்கே என்று கை காட்டினார்.
டாக்டர் சிரித்து விட்டுச் சொன்னார், " அம்மா, இது விட்டமின். தூக்க மாத்திரை அல்ல."

மகன் மீது எரிச்சல் உண்டானது.
டாக்டர் புஷ்பாவை செக் பண்ணியபடி பேசத் தொடங்கினார்.
" அம்மா, உங்களுக்கு ஒன்றுமில்லை. எல்லாம் உங்கள் மனசிலை தான் இருக்கு. இந்த நாடு, குளிர், பிள்ளைகள் என்று நிறையக் குழப்பங்கள். அதான் இப்படி நோய், வலின்னு மனசிலை நினைப்பு வந்திருக்கு. இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த ஊரிலை இருக்கப் போறீங்க?. மிஞ்சிப் போனால் இன்னும் 1 வருடங்கள் இருப்பீங்களா? அது வரை சந்தோஷமா இருக்கலாமே! கை, கால் வலிக்கு மாத்திரைகள் போடுங்கள் சரியாப் போய்டும். 2 வாரங்களின் பின்னர் மீண்டும் வாங்க சரியா." என்று முடித்துக் கொண்டார்.

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தார். டாக்டர் பின்னாடியே வந்தவர் சொன்னார்," இரண்டு வாரம். மறக்க வேண்டாம்."

புஷ்பா தயங்கி நின்றார்.
" சாமி வரம் குடுத்தாலும் பூசாரி குடுக்காத கதையாயில்லை இருக்கு ", என்று முணுமுணுத்தார் புஷ்பா.
" இல்லை. அந்தம்மாவிடம் நான் எப்படி இங்கிலீசுலை பேசுவேன்? மகனைக் காணவில்லையே.", என்று வரவேற்பறையில் இருந்த பெண்ணைக் கைகாட்டியபடி.
டாக்டர் பெருங்குரலில் சிரித்து விட்டு, அவரே அப்பாயின்மென்ட் வாங்கி குடுத்தார்.

வெளியே வந்தார். "என்னம்மா டாக்டர் என்ன சொன்னார்?" , என்று அன்புடன் கேட்ட மகனை நோக்கிப் புன்னகைத்தார்.
பேசியபடியே வீடு வந்து சேர்ந்தார்கள்.
மகன் வேலைக்குப் புறப்பட்டு விட. மீண்டும் தனிமை சூழ்ந்து கொண்டது.
குளிருக்கான ஆடைகளை அணிந்து கொண்டார்.
குளிர் காற்று முகத்தில் வந்து மோதியது. மனபாரம் குறைந்தது போல உணர்ந்தார் புஷ்பா.