Monday, May 14, 2012

அதோடு ஒரு பயணம்



சேகர், கூடையை கவனமா பார், என்றான் சண்முகம்.
சேகரின் முறைப்பினை பொருட்படுத்தாமல் ஜன்னல் வழியே பார்வையினை ஓடவிட்டான்.
பேருந்து அடுத்த ஸ்டாப்பில் நிற்க சில வயதான பெண்கள் கூடைகள் சகிதம் உள்ளே ஏறினார்கள். சில கூடைகளில் கீரை, சிலவற்றில் பழங்கள் என்று காணப்பட்டன.
சேகர் அலுப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
என் தலைவிதி உன்னோடு வரவேண்டி இருக்கே, என்று சண்முகத்திடம் குமுறினான்.
இருடா. இன்னும் அரை மணி நேரத்தில் கோயில் வந்துவிடும். அதன் பிறகு அங்கே இதை ... என்று சமாதானம் செய்தான் சண்முகம்.
கீரைக் கூடையோடு  ஏறிய பாட்டி இவர்களை நோக்கி வந்தார்.

சேகர் ஆழ்ந்து உறங்குபவன் போல கண்களை மூடிக் கொண்டான்.
ஏம்பா, எத்தனை கீரைக் கட்டு வாங்கினாய், என்றார் பாட்டி.
அஞ்சு இருக்கும் பாட்டி, என்றான் சண்முகம்.
உன்னை நான் முன்ன பின்ன இந்த பஸ்ஸில் பார்த்ததில்லையே, என்றார் பாட்டி. இன்னைக்கு தான் பிஸ்னஸ்  தொடங்குறாயா? ஒரு கட்டு எத்தனை ரூபாய்க்கு விற்கிறதா உத்தேசம்?. 5 கட்டுதான் இருக்கிறதா சொன்னே. இதை எந்த சந்தையில் கொண்டு போய் விற்கப் போகிறாய்,  என்று தொடர்ந்தார்.
பாட்டி சும்மா தொண தொணக்காமல் வா. இல்லாவிட்டால் இந்தக் கூடையை உங்களுக்கே தர வேண்டி வந்தாலும் வரலாம், என்றான் சண்முகம்.
பாட்டி அதன் பிறகு வாயை மூடிக் கொண்டாலும் அவரின் குறு குறுக்கும் பார்வை மட்டும் குறையவில்லை.


சண்முகத்திற்கு நேற்று நடந்தது எல்லாம் வரிசையாக ஞாபகம் வந்தது. உண்மையில் நேற்று அல்ல.  இந்தச் சம்பவம்... இல்லை இல்லை அந்த "அது"  இவனின் காதலி வீட்டினை சுற்றி வரத் தொடங்கி குறைந்து 2 மாதங்களாவது இருக்கலாம்.

காதலி வீட்டில் கோழிக் குஞ்சுகள், முட்டைகள் எல்லாம் மாயமாக மறைந்து போயினவாம்.காதலி சொன்னபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை  சண்முகம் . விடு உங்க அப்பா எடுத்து தின்னிருப்பார் என்று சமாதானம் சொன்னான். அவளின் அப்பா தான் இவனுக்கு வில்லன்.
இல்லை சண்முகம் எங்க வீட்டில் ஒரு பாம்பு இருக்கு. அது தான் எல்லாத்தையும் எடுத்து தின்னுது. நீ பெரிய ஆம்பிளையா இருந்தா அதை பிடி பார்க்கலாம், என்றாள்.
இவனுக்கு பாம்பென்றால் பயம் என்று சொல்வதை விட வெறுப்பு என்றே சொல்லலாம். அது நெளிந்து ஓடும்போது குமட்டிக் கொண்டு வரும். காதலி சொல்லும் போது எதுவும் சொல்ல முடியவில்லை. அடுத்த நாளே நண்பர்கள் துணையுடன் பெரிய வீரன் போல பாம்பு தேடச் சென்றான். கம்பு, தடிகளுடன் ஒரு கூட்டத்தினைக் கண்டதும்  இவனின் மாமனார், முடிஞ்சா அடித்துக் கொல்லுங்கள்,  என்று சொன்னார்.



என்னது பாம்பினை அடிப்பதா? அதன் சாபம் ஏழு ஜென்மத்துக்கும் விடாதே, என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்தார் வில்லனின் அம்மா.
அப்ப என்ன தான் செய்வதாம் என்று சொல்லு அதன்படி செய்துடுவோம், என்றார் அப்பா.
டேய்! அது சாதரண பாம்பு அல்ல. நாக பாம்பு. நீங்க அதை கவனமா பிடிச்சு நாக தம்பிரான் கோயிலில் கொண்டு போய் விட வேண்டும், என்றார் பாட்டி.
அதன் பிறகு சண்முகத்துக்கு உதறல் எடுத்தது. பாம்பினை லாவகமாக பிடிக்கும் முத்துவின் உதவியால் பிடித்து விட்டார்கள். ஆனால், முத்து ஏதோ அவசர வேலை இருப்பதாக சொல்லி கழன்று கொண்டான்.
சண்முகம் அவனுக்கு பணம் தருவதாக சொன்னபோதும் மறுத்துவிட்டான்.
நீயே கொண்டு போய் கோயிலில் போடுவியோ அல்லது அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்லை. நீ இதைக் கொன்றால் கூட கிழவிக்கு தெரியவா போகுது, என்று சொல்லிய பிறகு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் முத்து. மற்றைய நண்பர்களும் கழன்று கொண்டார்கள். மாட்டிக் கொண்டவன் சேகர் மட்டுமே.
தம்பிகளா, இதைக் கொண்டு போய் கோயிலில் விட்டுட்டு வாங்கப்பா, என்று வில்லன் கனிவாக சொன்ன போது மறுக்க முடியவில்லை.
டேய்  என் மாமா சொல்லிட்டார். கிளம்பு என்றான் சேகரிடம்.
ஆங் பெரிய மாமா சொல்லிட்டாராம். எங்க வீட்டில் கூட 5 முட்டைகள் காணாமல் போச்சு என்று சொன்னேன் நீ கேட்டியா? இப்ப உன் காதலி வீட்டில் 4 முட்டைகள்....
இல்லைடா 6 முட்டைகள் என்று இடையில் குறுக்கிட்ட நண்பனை முறைத்தான் சேகர்.
போடா லூஸூ. 60 முட்டைகள் காணாமல் போனாலும் பரவாயில்லை. நான் வரமாட்டேன், என்றான் சேகர்.

நண்பனை சமாதானம் செய்து, பாம்பினை சாக்கு பையில் போட்டு, அதை மீண்டும் இன்னொரு சாக்குப் பையில் போட்டு பஸ்ஸில் ஏறச் சென்றார்கள்.

டேய் தம்பி, அந்த கோணிப் பையில் என்ன இருக்கு?, என்றார் பஸ்ஸில் டிக்கெட் கொடுப்பவர்.
அதுவாங்கண்ணா.... என்று தயங்கி நின்றார்கள்.
இப்பெல்லாம் நாட்டு வெடி குண்டுகள் நிறைய கடத்துகிறார்கள். பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டியது தான். உனக்கு டிக்கெட் கொடுத்த பாவத்துக்கு நானும் கம்பி எண்ண ரெடியில்லை சொல்லிட்டேன். இப்பவே பையை திறந்து காட்டு என்று பிடிவாதம் பிடித்த நடத்துனரிடம் இருந்து தப்பி வருவதற்குள் வாழ்க்கை வெறுத்துப் போனது.

சைக்கிளில் போகும் தூரம் இல்லை. பஸ்ஸில் போகவே குறைந்தது ஒரு மணி நேரம் வேண்டும். என்ன செய்வது என்று தயங்கி நின்ற வேளை தான் சேகர் சொன்னான்.
டேய் லூஸூ, ஒரு ஓலைப் பெட்டி வாங்கி அதன் அடியில் இந்த கோணிப் பையினை வைச்சு. மேலே  கீரை வாங்கி அடுக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது, என்று சொன்ன நண்பன் தெய்வமாகத் தெரிந்தான்.


இடையில் வேறு ஒரு பஸ்ஸில் ஏறி இறங்க வேண்டும். கீரைக் கூடையுடன் திரிந்த விடலைகளை சிலர் சந்தேகமாகப் பார்த்தார்கள். எல்லோரின் பார்வையினையும் தவிர்த்து கோயில் போய் சேர்ந்தார்கள்.

ஏன் சண்முகம், பாம்பினை கோயிலில் கொண்டு போய் உண்மையில் விட்டியா? அல்லது அடிச்சுக் கொலை செய்தாயா? என்று காதலி சந்தேகமாக கேட்டாள்.
நீ என்னை நம்பவில்லை என்றால் சேகரிடம் கேள், என்றான்.
சரி. நம்புறேன். நீ பாம்பினை கோயிலில் விட்டதும் அது என்ன பண்ணிச்சு, என்றாள்.
இப்ப எதுக்கு அதெல்லாம் என்று மழுப்பினான்.
இல்லை சொல்லு. சும்மா ஒரு ஆர்வம் தான், என்றாள்.

அந்தக் காட்சி கண் முன்னே விரிந்தது. பஸ்ஸில் இருந்து இருவரும் இறங்கி நாகதம்பிரான் கோயிலை நோக்கிச் சென்றார்கள். கீரையினை எறிந்த பின்னர் கோணிப் பையினை நடுங்கும் கைகளினால் அவிழ்த்துவிட்டான். உள்ளே இருந்து ஆக்ரோசமாக சீறியபடி வந்த பாம்பு இருவரையும் நோக்கி வந்தது. அன்று ஓட்டம் எடுத்த சேகர் அதன் பின்னர் இவனின் நட்பினை முறித்துக் கொண்டான்.
காதலி பெரிய ஜோக் கேட்டவள் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.
இவளின் சிரிப்புக்காக இன்னும் ஆயிரம் பாம்புகள் பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் சண்முகம்.
( இது ஒரு கற்பனைக் கதையே. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே.)